ஏன் பரிசுத்த ஆவிக்குள் ஜெபிக்க வேண்டும்?
“நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக் கொண்டு பரிசுத்த ஆவிக்குள் ஜெபம் பண்ணி,” (யூதா 1:20). இவ்வசனத்திலே யூதா இரண்டு காரியங்களைக் குறிப்பிடுகிறார். ஒன்று விசுவாசம். மற்றொன்று பரிசுத்த ஆவி.
“விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்.” (எபிரேயர் 11:6). ஜெபத்திலே விசுவாசம் எவ்வளவு அவசியமானது என்பதை இவ்வசனம் காட்டுகிறது. மேலும் நாம் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபிக்கும் போது கேட்பதை பெற்றுக் கொள்வோம் என்பதை இயேசு கிறிஸ்துவும் சொல்லியிருக்கிறார். “நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள்.” (மத்தேயு 21:22). எனவே ஜெபத்திலே அவசியமாய்க் காணப்பட வேண்டியது விசுவாசமாகும்.
மேலும், “நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.” (1 யோவான் 5:14). தேவனுடைய சித்தத்தின்படி ஜெபிக்கும் போது ஜெபம் கேட்கப்படுகிறது என்பதை இவ்வசனம் காட்டுகிறது. அப்படியானால் தேவனுடைய சித்தத்தை அறிந்து எப்படி ஜெபிப்பது? இதற்கான பதிலை ரோமர் நிருபத்திலே அப்போஸ்தலாகிய பவுல் தெளிவுபடுத்துகிறார். “ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார். நாம் ஏற்றபடி வேண்டிக்கொள்ள வேண்டியதின்னதென்று அறியாமலிருக்கிறபடியால், ஆவியானவர்தாமே வாக்குக் கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல் செய்கிறார். ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால்…” (ரோமர் 8:26,27). ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே வேண்டுதல் செய்கிறார் என்பதை இவ்வசனம் தெளிவுபடுத்துகிறது. இதிலிருந்து நாம் அறிந்து கொள்வது பரிசுத்த ஆவிக்குள் ஜெபிக்கும்போது தேவனுடைய சித்தத்தின்படியே ஜெபிக்கிறோம். எனவே, நாம் தேவனிடத்தில் கேட்டவைகளைப் பெற்றுக் கொள்கிறோம்.
ஆதலால் விசுவாசத்தோடு பரிசுத்தஆவிக்குள் ஜெபம் பண்ணி, தேவனிடத்தில் கேட்டவைகளைப் பெற்றுக் கொள்வோம். ஆமென்.
Click here to read this post in English - Why Should We Pray in the Holy Spirit?
Comments
Post a Comment